செவ்வாய், 7 செப்டம்பர், 2010

அல்லைப்பிட்டி ஒரு குறும்பார்வை !!!

கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் எழுதும் அல்லைப்பிட்டி ஒரு குறும்பார்வை
நீண்ட தொடர் இத்தொடரை நீங்களும் படித்து உங்கள் பிள்ளைகளையும் படிக்க வையுங்கள்!
பகுதி-1 பகுதி-2 இதில் இணைக்கப்பட்டுள்ளன!


இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப்போற்றப்படுவது இலங்கைத்தீவு. இதன்கண்
அமைந்துள்ள ஒன்பது மாகாணங்களில் சிரசாக விளங்குவது யாழ்ப்பாணத்தைத்
தலைநகராகக் கொண்ட வடமாகாணம். இந்தமாகாணத்தின்கண் அடங்கியுள்ள
ஜந்து மாவட்டங்களுள் தலையாயது யாழ்ப்பாண மாவட்டம்.

யாழ்ப்பாண மாவட்டத்தினுள் தீவுப்பகுதியும் உள்ளடங்குவதாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து
தெற்குப்பக்கமாக அமைந்திருக்கும் பண்ணைக்கடலை ஊடறுத்துப் போடப்பட்ட
வீதியினைக் கடந்து சென்றால் தெற்கு, தென்மேற்குப் புறங்களில் கிழக்கே
மண்டைதீவில்





தொடங்கி வேலணைத்தீவு(லைடன்தீவு),புங்குடுதீவு, நயினாதீவு
நெடுந்தீவு, அனலைதீவு,எழுவைதீவு,காரைநகர்(காரைதீவு) ஆகிய தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன. இவைதவிர மக்கள் வசிக்காத சிறுசிறு
தீவுக்கூட்டங்களும் உள்ளன.மிகத்தூரத்தேயுள்ள(புங்குடுதீவிலிருந்து 12 கி.மீ
தூரத்தில்)நெடுந்தீவு , மற்றும் நயினாதீவு,எழுவைதீவு,அனலைதீவு ஆகியன
வீதிகளால் இணைக்கப்படாதவை. சிறிய- பெரிய மோட்டார்ப்படகுகளின் மூலமே அவற்றுக்கு மக்கள் பயணம் செய்கின்றனர். அவைகூடத் திருப்திகரமாய்
இல்லை. 

யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணைக்கடலைக் கடந்தால் தெற்குப்புறமாக முதலில் காணப்படுவது அல்லைப்பிட்டி என்னும் அழகிய கிராமமாகும்.
இதன் கிழக்குப்புறமாகவுள்ள மூன்று கடல்மைல்தூரத்துப் பரவைக்கடலைத்
தாண்டினால் மண்டைதீவைத் தரிசிக்கலாம். தெற்குப்பக்கமாக ஆழ்கடல்
அமைந்துள்ளது. வடக்குக் கடற்கரை ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்கிறது.
மேற்குத்திசையில் தொடர்ச்சியாக மண்கும்பான் கிராமம் காணப்படுகிறது.
4.8 கி.மீ கிழக்குமேற்காக நீளத்தையும் 3கி. மீ வடக்குத் தெற்கானஅகலத்தையும்
கொண்ட நீள்சதுர வடிவிலானது அல்லைப்பிட்டிச் சிற்றூர்.ஒரு காலத்தில்
சிறுசிறு மணற்குன்றுகளைக் கொண்டதாயிருந்தாலும், மண் அகழ்வினால்
எதுவிதமான மணற்பிட்டிகளும் அங்கில்லை.மணற்கிராமமாயினும், மணல்

அகழ்ந்த பள்ளங்கள்தான் காணப்படுகின்றன. 
பெருமளவுக்கு பனைவளம் நிறைந்த இவ்வூரில் நல்ல தண்ணீர் வளம் அதிகமுண்டு.வடக்குத் தரவைப் பகுதிகளை விட ஏனையவிடங்களில் நன்னீரூற்றுக் காணப்படுவதால் பன்னிரு மாதங்களும் பயிர்செய்யக்கூடிய
வாய்ப்புகள் உள்ளன. பணப்பயிரான புகையிலையுடன்,மிளகாய்,வெங்காயம்
தக்காளி, பயற்றை,கத்தரி முதலான பயிர்வகைகளும், மரக்கறிவகைகளும்
செய்கை பண்ணப்படுவதுண்டு.வானம் பார்த்த பூமியாதலால் தைமாதக் கடைசியில் அல்லது மாசி மாதத்தில் அறுவடை செய்யக்கூடியதாக நெல்
வேளாண்மையும் ஓரளவு உண்டு.வீடுகளில் தென்னையுடன் முருங்கை,போன்றவைகளும் காணப்படுகின்றன. வாழை,மா, முதலியனவும்
சிறியஅளவில் உண்டு.மழைக்காலங்களில் குளிர்ச்சியையும் வெயில் காலத்தில் வெம்மையையும் இந்த மண் வழங்கும்.ஆடு, மாடு, கோழி போன்றவைகளை வீடுகளில் வளர்த்துப் பயன்பெறுவர் இவ்வூரவர்கள்.

இவ்வூரில் 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னுள்ள இடப்பெயர்வுச் சூழ்நிலைகள்
பெரிய மாற்றத்தினைப் புகுத்தியுள்ளன. மீன்பிடித்தொழிலை மையமாகக் கொண்ட கிறிஸ்தவ மக்கள் ஓரளவுக்கு மீளக் குடியேறிய போதிலும் விவசாயிகளான இந்து மக்களின் குடியேற்ற வீதம் குறைந்து காணப்படுகிறது.
இத்துடன் அல்லைப்பிட்டி-மண்கும்பான் எல்லைக்கு அண்மித்ததாகத் தெற்குக்
கடற்கரைக்குக் கிட்டியதாய் மீனவர்களுக்கான புதிய குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு வருவதைக் காணலாம்
இன்னும் வரும்

2 commentaires: